சனி, 19 ஏப்ரல், 2025

IDAYAKOTTAI வெட்டுக்காடு மருதகாளி

 கொங்கு பகுதியின் தென் எல்லை கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பாச்சலூர், வடகாடு, சமவெளி பகுதியான ஒட்டன்சத்திரம், விருப்பாச்சி ஆகிய ஊர்களை மிக முக்கிய கதைகளமாக கொண்டு சுமார் நூறாண்டுகளுக்கு முந்தைய மக்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் ஆகியவற்றை எடுத்தியம்பும் எழுத்தாளர் நாவல் குமாரகேசன் அவர்களின் புனைவு நூலான "வெட்டுக்காடு மருதகாளி" புதினம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாற்றில் இருந்து தொடங்கி ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல் என கொங்கு மண்டல பகுதிகளில் பயணிக்கிறது.

 

(இவரின் முந்தைய நூலான "வண்டிப்பாதை" நாவல், இடையகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை கதைக்களமாகக் கொண்டு அமைக்கப்பட்ட அற்புதமான நாவலாகும்.) 
 
 

"வெட்டுக்காடு மருதகாளி"

தவறான தீர்ப்பால் வஞ்சிக்கப்படும் குடும்பத்தின் இளம்பெண் மருதகாளி, அவளது தாய்வழி பாட்டியுடன் தப்பி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இடையகோட்டை அருகில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்குகிறாள், அங்கும் எதிரிகள் வந்து அவளை கடத்த முயற்சிக்க நடந்த போராட்டத்தில் பாட்டி சின்னத்தா கொல்லப்படுகிறாள். 
நீதிமான் நாட்டாமையால் காப்பாற்றப்பட்ட மருதகாளி கொடைக்கானல் கீழ்மலையில் அமைந்துள்ள வெட்டுக்காடு வந்தடைகிறாள். 
அங்கு செல்வாக்குப்பெற்ற புதுக்குடியாரிடம் அடைக்கலம் ஆகிறாள். தந்தையின் ஸ்தானத்திலிருந்து உதவும் புதுக்குடியாரிடம் அடைக்கலமான மருதகாளி தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமான எதிரிகளை பழி வாங்கினாளா என்பதுதான் வெட்டுக்காடு மருதகாளி புதினம். 

கதையின் ஊடாக பல்வேறு கிளைக் கதைகள் அழகுடன் கூறப்பட்டுள்ளன. நெல், கம்பு என பல்வேறு தானியங்கள் குறித்தும் அவற்றை பயிரிடுதல், மண்ணின் தன்மை, தண்ணீரின் வகைகள், பண்ணைகளின் வளம், பண்ணைகளின் எஜமானியான பண்ணையக்காரச்சிகளின் தயாள குணம், மரம் வெட்டும் தொழில் என பல்வேறு குறிப்புகள் சற்று விரிவாகவே ஆங்காங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

அதுமட்டுமின்றி ஆடு, மாடு, குதிரை கழுதை, நாய், நரி என விலங்குகள் குறித்தும் வவ்வால், காகம், கோழி, குயில், செம்போத்து (செங்காகம்), கின்னிக்கோழி, மயில் ஆகிய பறவைகள் குறித்தும் அவற்றின் இயல்புகள் குறித்தும் மிகுந்த சிரத்தையுடன் தேடி அலைந்து குறிப்புகளை வழங்கியுள்ளார். எறும்புகள் குறித்து கூட விரிவான தகவல் உண்டு. 

நல்லவர்கள் உண்டு என்றால் தீயவர்களும் உண்டுதானே, அப்படிப்பட்ட தீயவர்களின் தீக்குணங்களையும் கதையின் போக்கில் சொல்லியிருப்பது சிறப்பு, குறிப்பாக அக்கால வழிப்பறித் திருடர்களின் பழக்கவழக்கங்கள், திருட்டு யுத்திகள் மட்டுமின்றி அவர்களின் தொழில் தர்மங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது வாழ்க்கை தேவைக்காக கொள்ளையடித்தாலும் அதிலும் சில தர்மங்களை கடைபிடித்துள்ளனர். திருடப்போன இடத்தில் சக கொள்ளையன் கொல்லப்பட்டு விட்டால் அவனது குடும்பத்தை பாதுகாக்க வேண்டியது அந்த கொள்ளை கூட்ட தலைவனின் பொறுப்பாகவும், அதற்காக அந்த குடும்பத்திற்கு என களவுபடி வழங்குதல் என்ற நடைமுறை இருந்துள்ளது. திருடர்கள், தீயவர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களின் குற்றங்களை ஒடுக்குவதற்கும் மற்றவரை எச்சரிப்பதற்கும் மூட்டு விலக்குதல் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. 

நூற்றாண்டுக்கு முந்தைய கதைக்களம் என்பதால் அப்போதைய நவீன கண்டுபிடிப்பான ரயில் வண்டியின் அறிமுகமும், ரயில் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் விவரிக்கப்பட்டுள்ளது. 
குளிப்பட்டி அருகே உள்ள சர்க்கரை பாவா தர்கா குறித்து இதுவரை யாரும் தராத புதுமையான விளக்கமும் வியக்க வைக்கிறது. 

ஆடிக்காற்று திருட்டு தொழிலுக்கு உகந்த காலம் என்றும் பறவைகள் அடைகாக்கும் போது கோடை மழை பெய்து இடி இடித்தால் முட்டைகளின் கரு கலைந்து போகும் என்பது போன்ற தகவல்கள் பயனுள்ளது.

 நாவலின் இடையே வரும் சடைகுளம் வெட்டப்பட்டதும், அப்பெயர் வரக் காரணமாக அதன் கரையை காக்க நடைபெற்ற பூசை குறித்த தகவல் பெரும் பீதியூட்டுகிறது. நில அளவை முறை, கள் ஊண்டுதல் ஆகியவை குறித்து விரிவாக தகவல் தருகிறது.

 கதையின் குறிப்பிடத்தக்க மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால் கதை மாந்தர்களில் விஷ்ணு வர்த்தினி தவிர்த்து  மற்ற அனைவரின் பெயர்களும் தனி தமிழ் சொல்லாகவே இருப்பதும், ஆங்காங்கே இடம்பெற்றுள்ள சொலவடைகள் எனப்படும் பழமொழிகளும் கதையை மேலும் அழகூட்டுகிறது. 
பல்வேறு குறிப்புகள் 770 பக்க நாவலை படிப்பதில் சற்றே அயர்வைத் தந்தாலும் அடுத்தடுத்து கதையின் போக்கில் அந்த அயர்வு மறைந்து விடுகிறது. 
சுருக்கமாக கூறுவதானால் கொங்கு மண்டலத்தின் வாழ்வியலையும், வழக்கங்களையும் பதிவு செய்துள்ள தகவல் களஞ்சியம் "வெட்டுக்காடு மருதகாளி".
 
ஆசிரியர் : நாவல் குமாரகேசன் 

வெளியீடு : 
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 
41, கல்யாண சுந்தரம் தெரு, 
பெரம்பூர், சென்னை - 11.