"மிகவும் கண்டிப்பான, மிகுந்த அக்கறையுள்ள, பாசமானவர்" இப்படித்தான் கூற வேண்டும் எனது முதல் வகுப்பு (ஒண்ணாப்பு டீச்சர்) ஆசிரியர் திருமதி சுசிலா பாய் அவர்களை பற்றி.
வீட்டுக்கு எதிரிலேயே பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தை ஒட்டிய சந்திலேயே அங்கிருந்து பார்த்தால் எங்களது வீடு தெரியும் என்ற அளவில் அவரது வீடு.
ஏதேனும் சேட்டை செய்தால் டீச்சர்ட்ட சொல்லிடுவேன் என்பது எனது தாயாரின் குறைந்தபட்ச மிரட்டல்.
டீச்சர்ர்ர்... அம்மா சற்று உரத்து அழைக்க, என்ன கஜ்ஜாம்மான்னு ஒரு டெரர் ரிப்ளையில் நானும், அண்ணன்களும் இருக்குமிடம் தெரியாமல் அடங்கிவிடுவோம்.
ஆசிரியர் என்பதை தாண்டி எனது தாயாரின் மிகச்சிறந்த தோழியும் அவரே; எனவே டீச்சர் அடிச்சுட்டாங்ன்னு அம்மாவிடம் சொல்ல முடியாது. கஜ்ஜாம்மா (கதீஜா பீவி என்பது பேச்சு வழக்கில் கஜ்ஜாம்மா எனவும் வயதில் இளையவர்கள் கஜ்ஜாக்கா எனவும் அழைப்பர்) "உன் பையன் ஷாகுல் வீட்டுப்பாடம் எழுதாம வந்து எங்கிட்ட அடிவாங்கினான்"னு சாயந்தரம் வீட்ல வந்து சொல்லிடுவாங்க. அப்புறம் என்ன Punishment 2.0 வீட்ல சிறப்பா நடக்கும். அந்த பள்ளியில் வெள்ளி, சனி் வார விடுமுறை.
மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, ஒருதடவை விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் எழுதிவரச்சொல்லியிருக்க நானோ எழுதாமல் சென்று விட்டேன்.
வகுப்பில் நுழைந்ததும் வீட்டுப்பாடம் எழுதாத எனக்கு மாலை வரை அவகாசம் நீட்டிப்பு செய்தும் (அவருடைய வழக்கமான வயிற்றில் கிள்ளுடன்) என்னால் எழுத முடிய வில்லை. பள்ளியின் வெளித்திண்ணை நெடுக இரும்புக் கம்பிகளால் அரண் அமைக்கபபட்டு இருக்கும். பள்ளி முடிந்ததும் என்னை மட்டும் திண்ணையில் அமர வைத்து வெளியே பூட்டிச் சென்று விட்டார்(சிறைத்தண்டனை).
நாளை எழுதிட்டு வந்துருவான்னு எனது வளத்தம்மா (தாயாரின் தாயார்) ஜாமீன் வழங்க, ஒருமணி நேரம் கழித்து விடுதலையானேன்.
2 K kids போல் ஸ்ட்ரெஸ் அறியா காலமது.
வேடிக்கை என்னவென்றால் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் அவரது மகன்கள் பிரின்ஸ், பிரசன்னா இருவருடனும்தான் எங்களுக்கு பொழுதுபோக்கே.
டீச்சர் அவர்களின் கணவர் திரு.எட்வர்ட் பால் அவர்கள் இ.கல்லுப்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் ஆசிரியர்களாக இருந்ததால் அவ்வப்போது பணிநிமித்தம் வெளியூர் சென்று விட்டால் போதும் அவர்களின் வீடே அதகளமாகிவிடு்ம்.
எட்வரட் சார் அவர்களின் கலகலப்பான பேச்சுகளுடன் டென்சன் இல்லாத டியூசன் மறக்க இயலா மலரும் நினைவுகள்.
பிள்ளைகளின் படிப்புக்காக திண்டுக்கல்லில் குடும்பத்துடன் குடியேறிவிட்டாலும், இடையகோட்டையில் ஆசிரியர் பணியும், எங்கள் குடும்பத்துடனான நட்புறவும் மாறவேயில்லை.
அவ்வப்போது நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் எனது தாயாரிடம் பேசி நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கி, எனது தாயாரின் மரணம்வரை சிறந்த தோழியாகத் திகழ்ந்தவர் திருமதி. சுசிலாபாய் எட்வர்ட் அவர்கள் நலமுடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திிக்கிறேன்.
அன்புடன்,
சை.ஷாகுல் ஹமீது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக