சனி, 24 மே, 2025

IDAYAKOTTAI அனைவருக்கும் நன்றி

 15 ஆண்டுகள்

117  பதிவுகள்
 
45753 பார்வைகள் ( 24.05.2025  காலை 9.00 மணிக்கு) 
 
2010 ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது நமது இடையகோட்டை வலைப்பூ🌺
 பதினாறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது வலைப்பக்கத்தில்
இடையகோட்டை குறித்த வரலாற்று குறிப்புகள், இடையகோட்டையின் சான்றோர் பெருமக்கள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை இணைய வழி மூலம் உலகெங்கும் எடுத்துச் செல்ல மேற்கொண்ட முயற்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை பிளாக்கர் புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா என நான்கு கண்டங்களில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது பணிச்சுமை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் பதிவுகளுக்கான ஆதாரங்கள் திரட்டுவதிலும், பதிவுகள் எழுதுவதிலும் சற்று தோய்வு ஏற்பட்டுள்ளது வாஸ்தவம் தான். 

இனி வரும் காலங்களில் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் பதிவுகள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் சேகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து நமது வலைப்பூவை வாசித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 🎉🎉🎉🎉

ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளது போல் நீங்களும் இடையகோட்டை சார்ந்த தகவல்கள், ஆவணங்கள், நிழற்படங்கள் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் மூலமாக அல்லது whatsapp மூலமாக அனுப்பும் பட்சத்தில் அனுப்புபவரது படம் மற்றும் பெயருடன் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

🌹🌹🌹🌹வாருங்கள் நமது ஊரை உலகறிய செய்வோம். 
👍👍👍
 
அனைவருக்கும் நன்றி.      




வியாழன், 8 மே, 2025

IDAYAKOTTAI சுசீலா டீச்சர்

 "மிகவும் கண்டிப்பான, மிகுந்த அக்கறையுள்ள, பாசமானவர்" இப்படித்தான் கூற வேண்டும் எனது முதல் வகுப்பு (ஒண்ணாப்பு டீச்சர்) ஆசிரியர் திருமதி சுசிலா பாய் அவர்களை பற்றி.


வீட்டுக்கு எதிரிலேயே பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தை ஒட்டிய சந்திலேயே அங்கிருந்து பார்த்தால் எங்களது வீடு தெரியும் என்ற அளவில் அவரது வீடு.
 ஏதேனும் சேட்டை செய்தால் டீச்சர்ட்ட சொல்லிடுவேன் என்பது எனது தாயாரின் குறைந்தபட்ச மிரட்டல்.


டீச்சர்ர்ர்... அம்மா சற்று உரத்து அழைக்க, என்ன கஜ்ஜாம்மான்னு ஒரு டெரர் ரிப்ளையில் நானும், அண்ணன்களும் இருக்குமிடம் தெரியாமல் அடங்கிவிடுவோம்.
 ஆசிரியர் என்பதை தாண்டி எனது தாயாரின் மிகச்சிறந்த தோழியும் அவரே; எனவே டீச்சர் அடிச்சுட்டாங்ன்னு அம்மாவிடம் சொல்ல முடியாது. கஜ்ஜாம்மா (கதீஜா பீவி என்பது பேச்சு வழக்கில் கஜ்ஜாம்மா எனவும் வயதில் இளையவர்கள் கஜ்ஜாக்கா எனவும் அழைப்பர்) "உன் பையன் ஷாகுல் வீட்டுப்பாடம் எழுதாம வந்து எங்கிட்ட அடிவாங்கினான்"னு சாயந்தரம் வீட்ல வந்து சொல்லிடுவாங்க. அப்புறம் என்ன Punishment 2.0  வீட்ல சிறப்பா நடக்கும். அந்த பள்ளியில் வெள்ளி, சனி் வார விடுமுறை.
மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, ஒருதடவை விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் எழுதிவரச்சொல்லியிருக்க நானோ எழுதாமல் சென்று விட்டேன்.
வகுப்பில் நுழைந்ததும் வீட்டுப்பாடம் எழுதாத எனக்கு மாலை வரை அவகாசம் நீட்டிப்பு செய்தும் (அவருடைய வழக்கமான வயிற்றில் கிள்ளுடன்)  என்னால் எழுத முடிய வில்லை. பள்ளியின் வெளித்திண்ணை நெடுக இரும்புக் கம்பிகளால் அரண் அமைக்கபபட்டு இருக்கும். பள்ளி முடிந்ததும் என்னை மட்டும் திண்ணையில் அமர வைத்து வெளியே பூட்டிச் சென்று விட்டார்(சிறைத்தண்டனை).

நாளை எழுதிட்டு வந்துருவான்னு எனது வளத்தம்மா (தாயாரின் தாயார்) ஜாமீன் வழங்க, ஒருமணி நேரம் கழித்து விடுதலையானேன்.
2 K kids போல் ஸ்ட்ரெஸ் அறியா காலமது.

வேடிக்கை என்னவென்றால் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் அவரது மகன்கள் பிரின்ஸ், பிரசன்னா இருவருடனும்தான் எங்களுக்கு பொழுதுபோக்கே.


                              
டீச்சர் அவர்களின் கணவர் திரு.எட்வர்ட் பால் அவர்கள் இ.கல்லுப்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் ஆசிரியர்களாக இருந்ததால் அவ்வப்போது பணிநிமித்தம் வெளியூர் சென்று விட்டால் போதும் அவர்களின் வீடே அதகளமாகிவிடு்ம்.
எட்வரட் சார் அவர்களின் கலகலப்பான பேச்சுகளுடன் டென்சன் இல்லாத டியூசன் மறக்க இயலா மலரும் நினைவுகள்.



பெற்றோரின் மேன்மைகளை மாணவர்கள் உணரும்வண்ணம்
”அகத்தியர்” திரைப்படத்தில் வரும்
 “தாயிற்சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை”
என்ற அருமையான பாடலை பள்ளியில் தினமும் மதியம் சத்துணவு சாப்பிடும் முன்பாக மாணவர்களைபாடச் செய்தார். (இவ்வழக்கம் தற்போது இல்லை)

அதேபோல் காலை பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் 
மாணவர்கள் 
 "எல்லோரும் ” "கற்போம்"  

 ஒன்றாக” ," கற்போம்" 

" நன்றாக " கற்போம்" 

எல்லோரும் ” "உழைப்போம்"  

 ஒன்றாக” ," உழைப்போம்" 

" நன்றாக " உழைப்போம் ”" 
"
எல்லோரும் ” "வாழ்வோம்"  

 ஒன்றாக” ," வாழ்வோம்" 

" நன்றாக " வாழ்வோம் ”

என முழக்கமிடுவது வழக்கமாக்கப்பட்டது.


பிள்ளைகளின் படிப்புக்காக திண்டுக்கல்லில் குடும்பத்துடன் குடியேறிவிட்டாலும், இடையகோட்டையில் ஆசிரியர் பணியும், எங்கள் குடும்பத்துடனான நட்புறவும் மாறவேயில்லை.

                                 

அவ்வப்போது நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் எனது தாயாரிடம் பேசி நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கி, எனது தாயாரின் மரணம்வரை சிறந்த தோழியாகத் திகழ்ந்தவர் திருமதி. சுசிலாபாய் எட்வர்ட் அவர்கள் நலமுடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திிக்கிறேன்.

அன்புடன்,

சை.ஷாகுல் ஹமீது.