சனி, 12 டிசம்பர், 2020

IDAYAKOTTAI - உரூஸ் விழா PART 4


 சமய நல்லிணக்க திருவிழா சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இடையகோட்டை முஹையதீன் ஆண்டவர் தர்ஹா உரூஸ் விழா நடந்து முடிந்துள்ளது. 

விழா துளிகள் 

* ஒவ்வொரு ஆண்டும் ஹிஜ்ரி காலண்டர் படி ரபியுல் ஆகிர் மாதம் கொண்டாடப்படுகிறது.

* முன்னதாக ரபியுல் அவ்வல் மாதத்தில் மிலாடி நபி முடிந்த பின்னர் வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு சந்தனக்கூடு   செப்பனிடும் பணிகளுக்காக தர்ஹா   திறக்கப்படும்.

* ரபியுல் அவ்வல் மாதத்தின் கடைசி நாள் மாலை (ரபீயுல் ஆகிர் பிறை துவங்கும் நேரம்) கொடியேற்றம் நடைபெறும்.

கொடியேற்ற ஊர்வலம் அன்றைய அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கி இடையகோட்டை ஜமீன் அரண்மனையை அடையும்.

* ஜமீன்தார் சார்பாக வழங்கப்படும் கொடியை பெற்று குதிரை மீது  வைத்துக்கொண்டு ஊர்வலம் மீண்டும் தர்ஹா வந்து சேர்ந்தபின்னர்    மஹ்ரிப் தொழுகைக்குப்பின் மினாராவில் நிறுத்தப்பட்டுள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.

* இதேநாளில்தான் தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை தெற்குவாசல் முஹைதீன் ஆண்டவர் தர்ஹா கொடியேற்றம் நடைபெறும்.

ரபீயுல் ஆகிர் பிறை 9 அன்று மஹரிபுக்குப் பிறகு  பாக்தாதில் இருந்து பெறப்பட்ட பழமை வாய்த்த போர்வை ஊர்வலம் நடைபெறுகிறது.

ரபீயுல் ஆகிர் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் உரூஸ் விழா நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்களும் பகல் மற்றும்  இரவு நேரங்களில் பிரார்த்தனை செய்ய விரும்பும் அனைவருக்கும்  ஆண்,பெண்,சாதி,மத பேதமின்றி தர்ஹாவில் அனுமதி வழங்கப்படுகிறது.

* இரவு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் இறுதியில்  அதிகாலையில் வண்ணமிகு வாணவேடிக்கைகளுக்கு பின்னர் சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெறுகிறது 

* மூன்றாவது நாள் உரூஸ் ஊர்வலம் நிறைவுற்றவுடன் வருகை தந்துள்ள பக்தர்களுக்கு தப்ரூக் (பிரசாதம்) ஆக சந்தனம் வழங்கப்பட்டு அன்றைய தினம் மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் கொடி இறக்குதலுடன் உரூஸ் விழா நிறைவடைகிறது.

* விழா நாட்களில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் நேர்ச்சையாக வழங்கும் கந்தூரி (அன்னதானம்) நடைபெறுகிறது. 


IDAYAKOTTAI உரூஸ் விழா PART 3

 













IDAYAKOTTAI- உரூஸ் விழா PART 2
















ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

IDAYAKOTTAI- மலரும் நினைவுகள்



↑↑↑இடையகோட்டை மண்ணின் மைந்தர் ஜனாப்.எஸ்.ஹெச்.சையது யூசுப் அவர்கள் துருக்கி நாட்டு தூதராகப் பதவியேற்றமைக்கு வாழ்த்து மடல்.

அப்போதைய முதல்வர் எம்.ஜி. ஆர். அவர்களுடன் ↓↓










 

சனி, 5 செப்டம்பர், 2020

IDAYAKOTTAI - ராஜேந்திரன் சார்

செய்த தவறை தைரியமாக ஒத்துக்கொள்.

 யாரிடமும் கை கட்டி நிற்காதே; அது ஆசிரியராகவே இருந்தாலும்,       நானாகவே இருந்தாலும் சரி.

 நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்து முதல்நாள் முதல் பாட வேளையில் ஆசிரியர் ராஜேந்திரன் அவர்கள் மாணவர்களிடம் கூறிய அறிவுரை. 1981ஆம் ஆண்டு முதன்முதலில் இடையகோட்டை நேருஜி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்றதில்  இருந்து கடைசிவரை இந்த மண்ணின் மைந்தர் ஆகவே மாறிவிட்டவர்  ஆசிரியர் ராஜேந்திரன் அவர்கள், பாடம் நடத்துவதில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது. ஏழாம் வகுப்பில் அவர் நடத்திய முற்றொருமை சூத்திரம் இன்றுவரை அத்துபடி.                                                          மாணவர்களுக்கு எவ்வித செலவும் வைக்காமல் பாடம் எடுத்த ஆசிரியர் பாடம்  மட்டுமன்றி பொது அறிவு தகவல்கள், வரலாற்று சம்பவங்கள், தமிழக அரசியல் நிலவரங்கள், இந்திய அரசியல் நிலவரங்கள் என மாணவர்களிடம் அவர் பேசாத தகவல்களே இல்லை. பாடங்களை நடத்தும் பொழுது மிகுந்த சுவாரசியத்துடன் நகைச்சுவை கலந்து பாடம் புகட்டுவது அவருடைய தனித்தன்மை. அவரது பாடவேளை எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். அப்போதெல்லாம் கைடு  என்று சொல்லப்படக்கூடிய குறிப்புதவி நூல்கள் வாங்க வசதியின்றி புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுத திணறும்  மாணவர்களுக்கு அவரே முழு புத்தகத்திற்கும் வினாவிடை தயார்செய்து எழுத செய்வார். சிறிய வகுப்பு பெரியவகுப்பு என்றெல்லாம் இல்லாமல் சிறப்பு வகுப்புகள் எடுத்து பாட குறிப்புகளை வழங்குவார். 

   மாணவர்கள் மனச்சோர்வு அடையாமல் இருக்க ஆண்டு விழாக்கள், சுற்றுலாக்கள் என பல்வேறு பாடம் சாரா செயல்பாடுகள் மூலம் உற்சாகப்படுத்துவார். ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகள் மூலம் சாம்ராட் அசோகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் மாணவர்கள் மனதில் பதிந்தனர். பரதநாட்டியம், கோலாட்டம், கும்மி, குறவர் கூத்து போன்ற பாரம்பரிய கலைகளை மாணவர்கள் மூலம் அரங்கேற்றம் செய்தார்.  படிக்காத மாணவர்களை கண்டிக்கும் போதும் சேட்டை செய்யும் மாணவர்களை கண்டிக்கும் போதும் கடுமை காட்டாமல் அவர்களின் தவறை நகைச்சுவையாகவே உணரச் செய்து கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்வார். 

       சாரண சாரணியர் அமைப்பின் பொறுப்பாசிரியராக இருந்து மாணவர்களுக்கு சேவை மனப்பான்மையை  ஏற்படுத்தினார். இடையகோட்டை உரூஸ் விழாவிலும், மாரியம்மன் கோயில் திருவிழா, பழனி தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் சாரண சாரணியர் மாணவர்களை அழைத்துச் சென்று கூட்டங்களை ஒழுங்கு படுத்துதல், பொதுமக்களுக்கு உதவுதல், தண்ணீர்ப்பந்தல் அமைத்து தாகம் தணித்தல்  போன்ற சேவைகளை செய்தார். தன்னுடைய கல்லூரிப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

      பலருக்கும் அவர் பற்றிய எண்ணம் அவர் கஞ்சத்தனம் மிக்கவர் என்று. ஆனால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்த முயன்ற பல மாணவ மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மட்டுமின்றி அவர்களின் குடும்ப செலவிற்கு பண உதவி என ஒரு கொடையாளர் ஆகவே இருந்தவர்.  தேவையான அத்தியாவசியமான உதவிகளை தேவைப்படும் நபர்களுக்கு சரியான நேரத்தில் செய்து அதுவும் வெளியில்  தெரியாத வண்ணம் மறைமுகமாகவே செய்து வந்தவர். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என மாணவர்களை பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனம் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்தினார் தன்னுடைய  சொந்த பணத்தில்  ஒரு பகுதியை எப்போதுமே  பிறருக்கு  உதவ பயன்படுத்தியுள்ளார். தேர்வுகளில்  சிறந்த மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களுக்கு பள்ளியில்  நடைபெறும்  வழிபாட்டுக் கூட்டத்தில் பரிசுகள் வழங்கி  ஊக்குவித்து வந்தார். தன்னுடைய சொந்த ஊருக்கு அருகிலேயே பணி மாறுதல் கிடைத்தும் கூட இரண்டே ஆண்டுகளில் மீண்டும் நமது பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்ததுடன் தன்னுடைய ஓய்வு காலம் வரை இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே பணிபுரிந்தார்.  ரமலான் ,பக்ரீத் பெருநாட்களில் பக்கத்து வீடுகளில் இருந்து ஸ்பெஷல் உணவுகள் அவரது வீட்டுக்கும்,தீபாவளி இனிப்புகள் ,பொங்கல் கரும்புகள் அவரிடமிருந்து பக்கத்து வீட்டாருக்கும் பயணப்படும்.    

   சுமார் 30 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட தலைமுறையில்  பெரும்பாலானோர்  அவரின் மாணவர்களே. 1993 ஆம் ஆண்டு நமது ஊர் நங்காஞ்சி ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்தது  அவரது பழைய மாணவர் பலரை நேரில் சந்தித்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் உடனடியாக மக்களுக்கு உதவ தயாராக இருங்கள் என்று முன் தயாரிப்பு செய்ததுடன் கரையோர மக்களுக்கு நேரில் சென்று எச்சரிக்கை செய்து இரவெல்லாம் விழிப்புடன் இருக்கச் செய்தார். இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்த முயன்று அதற்கான வசூல் செய்த போது   தன்னுடைய சார்பாக பரிசு வழங்கியதுடன் போட்டி நடைபெற்ற மூன்று நாட்களும் முழுமையாக அனைத்து போட்டிகளையும் நேரில் கண்டு ரசித்து சிறந்த வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

    உழைப்பாளிகளுக்கு ஓய்வு என்பது கிடையாது என்பார்கள் எந்த நேரமும்  பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு பயிற்சி என்றிருந்த அன்னாருக்கு ஓய்வுக்காலம் ஒத்துவரவில்லையோ என்னவோ ஓய்வுபெற்ற பெற்ற ஒரே ஆண்டில் 20 8 2006 அன்று இரவு இடையகோட்டையிலேயே மரணம் அடைந்தார். அன்னாரின் மரணச் செய்தி மறுநாள் ஊரெங்கும் அதிர்ச்சியுடன் விடிந்தது. அவர் எந்த அளவிற்கு நமது ஊரையும் மாணவர்களையும் நேசித்தார் என்பதற்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டையில் நடந்த அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட நமது ஊர் மக்களின் எண்ணிக்கையே சான்று.  நமது ஊர் மக்கள் அவர் மீதும், அவர் நம்மீதும்  கொண்டிருந்த பேரன்பை அவரின் சொந்த ஊர்க்காரர்களும்  சொந்தங்களும் பிரமிப்புடன் கண்டனர்.  இன்றைய ஆசிரியர் தினத்தில் மட்டுமில்லாமல் எல்லா நாளிலும் ஆசிரியர் என்றாலே ராஜேந்திரன் சார் என்ற எண்ணத்தை  மாணவர்கள் மத்தியில் விதைத்து  சென்றுள்ளார்.

                                         நீங்கா நினைவுகளுடன்(மாணவன்),                                                                                                   சை. ஷாகுல் ஹமீது, 

உரூஸ் விழா வாசனை மாலை ஊர்வலத்தில் சாரண மாணவர் (1983) 


எனது திருமண விழாவில் சக ஆசிரியர்களுடன்  

1990 சாரணர் இயக்க மாணவர்களுடன் குழு நிழற்படம் (குழுவில் நானும் ஒருவனாக) 

1

ஞாயிறு, 19 ஜூலை, 2020

IDAYAKOTTAI - ராவ் பகதூர்



       பழைய தமிழ் திரைப்படங்களில் ராவ் பகதூர்  என்ற பெயரில் கதாபாத்திரங்கள் இடம்பெறுவதை பார்த்திருப்பீர்கள். ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில்கூட ராதாரவி தன்னைத்தானே ராவ்
பகதூர் என்று கூறிக்கொள்வார். 
 அது என்ன ராவ்பகதூர்?
                பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நற்சேவை செய்தோருக்கு அவர்களின் சேவையை பாராட்டி வழங்கப்பட்ட ஒரு பட்டம் இது. இதற்க்கு மாண்புமிகு இளவரசர்  என்று பொருள். இஸ்லாமியர்களாக இருப்பின் இவ்விருது கான்பகதூர் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 
                 
           திரு.குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கர் 1909-ல் நமது இடையகோட்டை ஜமீன்தார் ஆக பொறுப்பேற்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் அவர்களுக்கு இவ்விருது 1941-ம் ஆண்டு அப்போதைய கவர்னர் ஜெனரல் லின்லித்கோ  பிரபுவால் வழங்கப்பட்டுள்ளது. 
                   முதன்முதலில் ஊருக்குள் கப்பிச்சாலை அமைத்தவர் இவரே. இவரது காலத்தில் தோண்டப்பட்ட  மூன்று குடிநீர் கிணறுகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. 1937-ல் இவரின் முயற்சியால் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ள சின்னப்பாலம். பேருந்து நிலையப்பகுதியில் இவரது பெயரால் அமைக்கப்பட்ட குமாரமுத்து நிலையம்தான்   இன்று கால்நடை மருத்துவமனை அமைந்துள்ள கட்டிடம். 
    எந்த செயலை செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மையில் முத்திரை பதித்தவராகவே இருந்துள்ளார். அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம்  இன்றும்கூட முழுமையான பயன்பாட்டில் உள்ள சின்னப்பாலம். உசினியப்பா ராவுத்தர் மற்றும்  மஜீது ராவுத்தர் ஆகிய தலைசிறந்த ஒப்பந்ததாரர்களைக் கொண்டு கட்டப்பட்டது. இவ்விருவரும் நமதூர்க்காரர்களே. 
     குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கரவர்கள்   மாம்பழ கவிச்சிங்க நாவலர், ஜவ்வாதுபட்டி அம்பலவாணன், காசிபாளையம் நடராஜன், சோழியப்பகவுண்டனூர் நடராஜன், பொருளூர் நடராஜன்,பூமி பாலகதாஸ், போன்ற தமிழ் புலவர்களை ஆதரித்துள்ளார். (இவர்களில்  பூமி பாலகதாஸ் அவர்கள் தமிழ் திரையுலகின்  ஆரம்ப காலத்தில் வெளியான மேனகா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். மேலும் சுதந்திரப் போராட்டத்தில் உணர்ச்சியூட்டும் பாடல்களை எழுதியதற்காக வெள்ளை அரசாங்கத்தால் கைதாகி கோவை சிறையில்  உண்ண சரியான உணவு வழங்கப்படாமல் வதைக்கப்பட்டவர்.)
   இரண்டாம் உலகப்போரின்போது இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்கப்படுத்த 1941-ம் ஆண்டு பழனியில் தன்சொந்த செலவில் பிரம்மாண்டமான யானைகளின் அணிவகுப்பை நடத்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தை வியக்கவைத்தார்.  இவர் பாவா ராவுத்தர் என்ற இடையகோட்டையின் பெரும் நிலக்கிழாருடன்  நெருங்கிய நட்பு பூண்டு   மக்களிடையே நல்லிணக்கம் நிலவச் செய்த நல்லிணக்க நாயகர் தான் இடையகோட்டை, ராக்வபகதூர் குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்கள். 
படங்கள் 
1. ராவ்பகதூர் குமாரமுத்து வெஙகடாத்திரி நாயக்கர் அவர்கள்
2. சின்னப்பாலம் கட்டப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு 
3. பாவா ராவுத்தர் 1935-ல் கட்டிய நாகூர் ஆண்டவர் நினைவு மேடை 

சனி, 21 மார்ச், 2020

IDAYAKOTTAI - நங்காஞ்சி நதி

"ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ்" 

              ஒரு ஊரின்  அழகு அந்த ஊரில் ஓடும் ஆற்றின் மூலமாகத்தான் கிடைக்கும். மேலும் பழங்காலத்திலிருந்தே  ஆற்றங்கரைகளில் மனித நாகரிகம் தழைத்தோங்கியது என படித்திருப்போம். அதிலும் குறிப்பாக முதன்முதலாக மனித இனம் தோன்றிய பகுதியாக கருதப்படுவது அறிவியல் ரீதியாகவும், கிறிஸ்தவ யூத, இஸ்லாமிய ஆன்மீக ரீதியாகவும் தமிழகத்தின் ராமேஸ்வரம் முதல் குமரிக்கடல் உள்ளடங்கிய குமரிக்கண்டம் பகுதியே ஆகும். குமரிக்கண்டத்தில் ஓடிய பாறூழி  ஆறு குறித்த செய்திகள் சங்கத்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

             அதுபோலவே நமது ஊரிலும் ஓடக்கூடிய நங்காஞ்சி நதி புவியியல் ரீதியாகவும் வரலாற்று அடிப்படையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நதியாகும். இந்த நதியின் கரையில்தான் இந்திய விடுதலை வரலாற்றில் முதல் புரட்சியாக கருதப்படும் தென்னாட்டு புரட்சியின்  மையமான விருப்பாட்சி அமைந்துள்ளது. விருப்பாட்சி பாளையக்காரராக ஆட்சிபுரிந்த கோபால் நாயக்கர் வெள்ளையரை எதிர்த்து மைசூரின் திப்பு சுல்தான், திண்டுக்கல்லின்  வேலுநாச்சியார், மராட்டியத்தளபதி  தூந்தாஜி வாக், பல்லடம் ஹாஜி அலி போன்றோருடன் இணைந்து வெள்ளையரை எதிர்த்து களம் கண்டார். இவர்களில் ஒவ்வொருவரும் இந்த பரந்த நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தமையால் அவர்களுக்கிடையேயான தகவல் தொடர்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாகவும் இந்த தலைவர்களிடையே தூது சென்ற தூதுவர்கள் ஆங்காங்கே வெள்ளையரிடம் பிடிபட்டதாலும் ஒருங்கே தாக்குதல் நடத்தி வெள்ளையரை விரட்டியடிக்க வேண்டும் என்ற திட்டம் தோல்வியில் முடிந்தது இந்த வீரத் தளபதிகள் அனைவரும் வீரமரணம் அடைந்தனர். இந்த நங்காஞ்சியாற்றின் கரையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கோபால் நாயக்கர் தோல்வியடைந்து பின்னர் திண்டுக்கல்லில் தூக்கிலிடப்பட்டு மரணமடைந்தது வரலாறு. 

                 இவ்வாறு ஒரு புரட்சி வரலாற்றை தன்னகத்தே கொண்ட இந்த நங்காஞ்சி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின்  ஒரு பகுதியாக திகழும் கொடைக்கானல் மலையில்  உற்பத்தியாகி மலை மீது தவழ்ந்து விருப்பாட்சி அருகே தலைக்ககூத்து  என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாக தரைப் பகுதியை அடைகிறது மலைமீது ஓடிவரும் போது இந்த ஆற்றின் பெயர் பரப்பலாறு ஆகும். மலையிலிருந்து தரையிறங்கும் இடத்தில் 2 குன்றுகளுக்கு இடையே இந்த ஆறு செல்லும் வழியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது தலைக்கூத்து பகுதியிலிருந்து விருப்பாச்சி வழியாக மற்றும் ஒட்டன்சத்திரம் நகரின் எல்லையிலேயே சுற்றிவந்து கொசவபட்டி ஜவ்வாது பட்டி வழியாக இடையகோட்டை வருகிறது. வரும் வழியில் சடையகுளம்,கருங்குளம், மேலக்குளம், செங்குளம், செல்லாண்டியம்மன் குளம் (அம்மச்சி குளம்) உள்ளிட்ட பத்து குளங்களை நிரப்பி வருகிறது. இடையகோட்டை எல்லையில் நுழையும் இடத்தில் நங்காஞ்சி ஆறு அணை கட்டப்பட்டுள்ளது இங்கிருந்து கரூர் மாவட்டம் சேந்தமங்கலம், பள்ளப்பட்டி வழியாகச் சென்று அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது. ஒரே ஆறாக  இருந்தபோதும்  பரப்பலாறு என்ற பெயரில் மலை மீது தவழ்ந்து வரும் நமது ஆறு, கீழே இறங்கும் இடத்தில் தலைக்கூத்து நின்று பெயரிலும், தரையில் விழுந்த இடத்திலிருந்து இறுதியாக அமராவதியில் கலக்கும் இடம் வரையிலும் நங்காஞ்சி ஆறு இரண்டு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

                பருவமழைக் காலங்களில் சுமார் நான்கு முதல் ஏழு மாதங்கள் வரை கூட ஆற்றில் நீர்வரத்து இருக்கும் நமது ஊரின் அமைப்பு முழுமையும் இந்த ஆற்றை சார்ந்தே உள்ளது. பண்டைய காலத்தில் இப்பகுதி இன்று பழனி என்று அழைக்கப்படும் பொதினி  நாட்டை சார்ந்தே அமைந்துள்ளது. முப்பெரும் வேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின்  தேசங்கள் ஒன்று சேரும் பகுதியில் உள்ள ஊர் சேந்தமங்கலம் என்றே பெயர்பெற்று இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிக நுண்ணிய குறுமணல் பரப்பைக் கொண்ட அழகியதாகவே நமது ஆறு காட்சியளிக்கின்றது. அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும் சிறுவர்களும் பெண்கள் பெரியவர்கள் என அனைவரும் பொழுதுபோக்கும் ஒரு அழகிய இடமாகவே நமது  ஆறு இருந்து வந்தது, குறிப்பாக நமது ஊர்மக்களின் திருவிழாக்களில் இன்றுவரை நங்காஞ்சி ஆற்றுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. ரம்ஜான் பெருநாள், பக்ரீத் பெருநாள் மற்றும் அதற்கடுத்த இரண்டு நாள் என தலா மூன்று நாட்கள்  ஆற்று கூட்டம் என்ற பெயரில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பொழுதை கழித்த நாட்கள் 35 வயதை கடந்த அனைவருக்கும்  மிகச்சிறந்த மலரும் நினைவுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகாசிவராத்திரி தொடர்ந்து வரக்கூடிய தினங்களில் நடைபெறும் அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழாவின் கடைசி நாள் நிகழ்வுகள் முழுக்க நங்காஞ்சி ஆற்றில்  தான் நடைபெறும். நமது ஊரில் கோவில் திருவிழாக்களும், இந்த ஆற்றில் அக்னி சட்டி எடுத்து வரும் நிகழ்வுகளும் நமது ஆற்றின் உணவு உணர்வுபூர்வமான தொடர்புக்கு சான்றாகும். கங்கை முதல் காவிரி வரை மிகப்பெரிய ஆறுகளெல்லாம் நம் நாட்டில் வடக்கிலிருந்து தெற்காக பாயும்போது, நமது மாவட்டத்தில் உள்ள ஆறுகள் பெரும்பாலும்   தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்கின்றன அவற்றில் நமது ஆறும் ஒன்று.

                  கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய பல தலைவர்களும் நமது ஊரில் இந்த ஆற்றின் மணற்பரப்பில் கால் பதித்துள்ளனர் 1977ஆம் ஆண்டு பெய்த கன மழையின் விளைவாக இந்த ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் ஆற்றின் கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள முஸ்லிம் தொடக்கப் பள்ளி வரை பெருக்கெடுத்தது. பின்னர் 1993 ஆம் ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளம் கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவு வரை கரைபுரண்டது, நமது ஊரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய பாலத்தின் மேல்வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை, அப்போது  கட்டி முடிக்கப்பட்டநங்காஞ்சி  அணையை உடைத்தது. கடைசியாக 2008ஆம் ஆண்டு நங்காஞ்சி ஆறு அணை நிறையும் அளவிற்கு நீர்வரத்து இருந்தது. அதன் பின்னர் நிலைமை எவ்வாறு ஆனது? சங்ககாலம் தொட்டே மக்கள் வாழ்ந்து வரும் நமது ஊருக்கு அழகு சேர்க்கும் மன்னிக்கவும் சேர்த்த இந்த நங்காஞ்சி ஆறு  இன்று உயிர் தொலைத்த பிணமாய் மணல் தொலைத்த கட்டாந்தரையாக ஊர் சாக்கடைகளின் கூடல்  ஆகிவிட்டது தான் கொடுமையிலும் கொடுமை.

படங்கள் அடுத்த பாகமாய் ...

IDAYAKOTTAI - நங்காஞ்சி நதி 2



 நங்காஞ்சியாறு உற்பத்தியாகும் இடம்  (கூகுள் மேப் )








பரப்பலாறு அணை



  கூகுள் மேப்


நங்காஞ்சி அணை





அமராவதி ஆற்றுடன் கலக்கும் இடம் (கூகுள் மேப் )




20 ஆண்டுகளுக்கு முன் நமது ஊரில் ஆற்றின் காட்சி