இடையகோட்டைக்கு கிழக்கே இயற்கை அரண்போல் நீண்டு விரிந்த அழகிய மலைத்தொடர் கருமலை. அடர்த்தியான மரங்களை ஆடையாகப் போர்த்தியது போல் இருப்பதால் இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் தொலைவிலிருந்து பார்க்கும்போது யானை ஒன்று தனது துதிக்கையை முன்னால் நீட்டியவாறு படுத்துள்ளது போலத் தோன்றுவதால் கருமலை என்றழைக்கப்படுகிறது. தமிழில் யானையைக் குறிக்கும் சொல் ”கரி” என்பதாகும். கரிமலை என்பது மருவி ”கருமலை”யானது.
சுமார் 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கருமலையின் உயரம் கடல்மட்டத்தில் இருந்து அதிகபட்சம் 744 மீட்டர் (2441 அடி) வரை கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் இணை குன்றாகத் திகழும் இம்மலையில் முன்பு கரடி, வரையாடு, மான்கள் உள்ளிட்ட விலங்குகளும் பல்வேறு பறவையினங்களும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. நாடு விடுதலைக்கு முன்னர் வெள்ளை அதிகாரிகளாலும், செல்வந்தர்களாலும் பொழுது போக்காக வேட்டையாடப்பட்டு அழிந்து போய் விட்டன. தற்போது கூட்டம் கூட்டமாக மயில்களும் சில வகை பறவைகளும் மட்டுமே உள்ளன.
கருமலை உச்சியில் சுமார் 250 ஆண்டுகள் பழமையான மாயக்கண்ணன் கோவில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
மலை உச்சியில் ”பாழி” என்றழைக்கப்படும் நன்னீர் சுனை (ஊற்று) உள்ளது. மழைக்காலங்களில் கருமலையில் உற்பத்தியாகும் சிற்றோடைகள் நங்காஞ்சியாற்றில் கலக்கின்றன. புள்ளாக்கவுண்டனூரின் கிழக்குப் பகுதியில் கருமலையின் அடிவாரத்தில் முன்பு மக்கள் வசித்த குடியிருப்பு இருந்ததாகவும்,
அங்குள்ள பெரிய மைதானம் போன்ற பாறையில் சந்தை நடந்துவந்ததாகவும், அப்பாறை சந்தைமேடு என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கரூர்-திண்டுக்கல் அகல ரயில்பாதைத்திட்டம் உருவாக்கப்பட்டபோது இடையகோட்டை வழியாகச் செல்லும் வகையில் முதலில் திட்டமிடப்பட்டு கருமலை அடிவாரத்தில் நிலமும் தேர்வு செய்யபட்டது. மலையின் குறுக்காக பாதை அமைப்பதில் ஏற்படும் சிரமம் இருப்பதாகக் கூறி பாதை மாற்றப்பட்டு பாளையம் வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டது.
கருமலை, இடையகோட்டைக்கு இயற்கை அரணாக, எழில்மிகு சோலையாக, மயில்கள் சரணாலயமாக மட்டுமின்றி நம்மூர் மக்களுக்கு மழை அறிவிப்பு வழங்கும் இயற்கையான வானிலை மையமாகவும் உள்ளது. ஆம், மழைக்காலங்களில் மேகங்கள் கருமலையில் இருந்து கீழ்நோக்கி இறங்கும்போது மழை பெய்யத்துவங்கும். மேகங்கள் மேல்நோக்கிச் சென்றால் மழை விலகும் என்பது முன்னோர் கணிப்பு. 
